Tuesday 20 October 2020

சமணர்கள்

சேகுவேரா தன் நாட்டுக்காக போராடியவர். தேசபக்தர். ஆனால், இவரை நாயகனாக கொண்ட யாரும் தேசபக்தர்கள் இல்லை. பெரியபுராணம் படிக்காதவர்களுக்கு, ஞானசம்பந்தரை பற்றியோ, தர்மம் பற்றியோ, ராஜ்ய பரிபாலனம் பற்றியோ அறியாதவர்களுக்காக சொல்லி ஆக வேண்டும், அன்று நடந்ததை. ஞானசம்பந்தர் மதுரைக்கு விஜயம் போகும்போது நாவுக்கரசர் தடுக்கிறார். நாளும் கோளும் சரியில்லை. சமணர்கள் சூது செய்வார்கள். நீங்கள் சிறுபிள்ளை. நானும் துணைக்கு வருகிறேன் என்கிறார். கோளறு பதிகத்தை உடனே பாடிவிட்டு, சிவன் காலை பிடித்தவன் எவன் காலையும் பிடிக்கவேண்டாம் என்று அவரை தடுத்துவிட்டு தனியாக புறப்படுகிறார். அவர் தங்கியிருந்த மடத்துக்கு ஏவல் வைக்கிறார்கள் சமணர்கள். நெருப்பு பிடிக்கிறது. தங்கியிருக்கும் இடத்துக்கு தீ வைப்பவர்களை, சிசு கொலை செய்கிறவர்களை, வேதமறிந்த அந்தணர்களை மற்றும் அப்பாவிகளை கொல்கிறவர்களை, பெண்களை பலாத்காரம் செய்கிறவர்களை, பசுக்கொலை செய்கிறவர்களை என்று ஐந்து வகையான மஹாபாவங்களை புரிகிறவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே என்று ராஜ்ய நீதி சொல்கிறது. இவர்கள் அரசுக்கு வேண்டியவர்களாக இருந்ததால் மன்னன் தண்டிக்கவில்லை. சமணமும் பவுத்தமும் அறிவால் நம்மை வென்றதில்லை. ராஜாவை கைக்குள் போட்டுக்கொண்டுதான் இம்சித்தார்கள். இன்றும் அதே நிலைமை. இஸ்லாமும், கிறிஸ்தவமும், நாத்தீகமும் அதை அப்படியே தொடர்கின்றன. சம்பந்தர் பாடிய பாடல் அந்த தீயை அணைத்து, ஏவல் சென்று மங்கையர்க்கரசியின் கணவன் உயிருக்கு ஆபத்தின்றி 'பையலே சென்று பாண்டியருக்கு ஆகுக' என்று சம்பந்தர் சொல்ல. அவர்கள் வைத்த தீ வெப்பு நோயாக மாறி, மன்னனை தாக்கி கடும் காய்ச்சலில் விழுகிறான். மருந்துகள் குணப்படுத்தவில்லை. சமணர்களின் மயிற்பீலியும், மந்திரித்த நீரும் அதிகமாக்கின வெப்பத்தை. துடித்தான் மன்னன். வழியின்றி சம்பந்தரை வர சொன்னான். தன் வியாதியை போக்க சொன்னான். சமணர்கள், மன்னனின் ஒரு பாதியை நீங்களும் மறுபாதியை நாங்களும் குணப்படுத்துகிறோம் என்று சவால் விட்டனர். நீர் கொண்டுவந்த திருநீற்றை நம்பமாட்டோம் என்று சமையற்கட்டிலிருந்து சாம்பலை எடுத்து தந்தனர். பதிகம் பாடி நீரை இட்டு, சுகம் உண்டாக்கினார். சம்பந்தர் வென்றார். மறுபகுதியையும் குணப்படுத்தும்படி மன்னன் கேட்க, அதையும் செய்தார். அப்போது கூன் இருந்த பாண்டியன், கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறனானான். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அனல்வாதம் என்றார்கள். அனலில் தாங்கள் எழுதிய சுவடியை இடவேண்டும் என்றார்கள். சம்பந்தரின் சுவடி எரியவில்லை. சமணர்களின் சுவடி எரிந்தது. இந்த இடத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். செய்யவில்லை. புனல்வாதம் என்றார்கள். என்ன அபத்தம் இது? வாதம் வாதம் என்றால் இதற்கு முடிவென்ன என்று மன்னனின் மனைவி மங்கையற்கரசி கேட்க, சம்பந்தர் புனல்வாதத்தில் வென்றால் தாங்கள் கழுவேறுவதாக சவால் விட்டனர். சம்பந்தர் தோற்றால் அவர் ஏறவேண்டும் என்று சவால். ஓடும் ஆற்றில் இட்டனர். சம்பந்தரின் சுவடி திருவேடகத்தில் கரை ஒதுங்கியது. அதனால்தான் அந்த பெயர் அந்த ஊருக்கு வந்தது. சமணர்களின் சுவடி அடித்துக்கொண்டு போனது. தோற்றார்கள் சமணர்கள். கழு ஏறினார்கள். இறந்தார்கள். சரி, அவர்களை மதம் மாற்றிவிட்டிருக்கலாமே என்று இன்றுள்ளவர்கள் கேட்டால்? நமது பதில்: அதே கோரிக்கையை சமணர்கள் வைத்திருக்கலாமே? நீங்கள் இந்த கேள்வியை சமணர்களிடம் கேட்டிருக்கலாமே? போய் அவர்களிடம் கேட்பதை விட்டுவிட்டு இங்கு வந்து கேட்கிறார்கள். வைதீக தர்மத்தை நிலைநாட்ட சங்கரரும் வாதம் செய்தார். சந்நியாசம்தான் வழங்கினார். அதுதான் சவால் அங்கு. இங்கு இது சவால். இத்தனைக்கும் தான் தோற்றால் ஸந்யாஸத்தை விடுத்து சம்சாரியாகிறேன் என்று பெரும் பாவத்தை முன்னிறுத்தி சவால் விட்டார் சங்கரர். சரி. இதை சம்பந்தர் தடுத்திருக்கலாமே? மன்னனிடம் சென்று மன்னா, அவர்களை மன்னியுங்கள். உயிர் பிச்சை அளியுங்கள் என்று சொல்லியிருக்கலாமே? சைவம்தான் சிவமயமாயிற்றே? அன்புதானே சிவம்? கேட்பார்களே, பதில் சொல்லவேண்டுமே? ஒரு மடாதிபதி, மன்னனின் தீர்ப்பில் தலையிடக்கூடாது. இதற்கு பெயர்தான் செக்யுலரிசம். ராமனை செருப்பால் அடிப்பதோ, நாத்தீகம் பேசுவதோ, மற்ற மதத்தை அவதூறாக பேசுவதோ அல்ல. பல நூற்றாண்டுகள் முன் மன்னனின் தீர்ப்பில் சர்ச்சுகள் தலையிட்டு, தண்டனைக்கு பாவமன்னிப்பு தந்து விடுவித்தன. குற்றங்கள் அதிகரித்தன. மன்னனால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சர்ச்சுகள் அரசாங்க நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டு, அரசாங்கம் மத தலையீடு இல்லாமல் செக்யுலராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். சட்டம் இயற்றப்பட்டது. ஹிந்து மதத்தில் எந்த மன்னனின் தீர்ப்பில் எந்த மடாதிபதி என்று தலையிட்டார்? அதனால் இந்த தீர்ப்பில் தலையிட முடியாது, தனக்கு உரிமை இல்லை. மீறி தலையிட்டால் எல்லை மீறியதாகும் என்று தர்மத்தின் கீழே விலகினார் சம்பந்தர். இவர்தான் கொன்றார்கள் என்கிறார்கள். அவரிடம் என்ன படையா இருந்தது தண்டனையை நிறைவேற்ற? அவர் என்ன மன்னனா? படை இருந்திருந்தால் நெருப்பு வைத்தவர்களை கொல்லாமல் பாட்டு ஏன் பாடினார்? அன்று நம்மை இம்சித்த சமண பவுத்தம் இன்றும் இருக்கிறது. யாருக்கும் தொந்தரவில்லை அவர்களால். சமுதாயத்தில் பெரும் நன்மைகளை செய்துவருகிறார்கள். எத்தனையோ பவுத்த கோவில்கள் உள்ளன. அவர்களாலும் யாருக்கும் தொந்தரவில்லை. அடைக்கலம் கேட்டு வந்த தலாய் லாமாவுக்காக சைனாவுடன் போரிட்டு தோற்றோம். இப்போது இஸ்லாமும், கிருஸ்த்தவமும் நாத்தீகர்களும் செய்து வரும் அட்டூழியங்களை அவர்கள் அன்று செய்தார்கள். மன்னன் தண்டித்தான். இதில் சம்பந்தர் மீது என்ன குற்றம்? Post from Anand Venkat (Edited)

No comments: