Sunday 16 October 2022

கடவுள் வந்தார்.

*இன்று ஒரு தகவலுடன்*. #கடவுள்_வந்தார்...! என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..! என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன்.. எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..! இரண்டாம் மனிதன்.. நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..! மூன்றாம் மனிதன்.. உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..! நான்காம் மனுஷி.. உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..! இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..! கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..! பத்தாவது மனிதன் கேட்டான்: உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..! ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..! மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..? கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..! என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.. சிறிது நேரம் கழித்து வருகிறேன்.. என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..! இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்.. என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..! அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..! பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..! நாம் பத்தாவது மனிதனா..? இல்லை பத்தாது என்கிற மனிதனா..? முடிவு நம்மிடமே.. *எண்ணும் எண்ணங்களே நம்மை தீர்மானிக்கும்.*🌹🙏

No comments: